'ஈ' 'தா' 'கொடு' சொற்களின் தமிழ் நுட்பம் |
கொப்பூழா? தொப்புளா?
தாய் வயிற்றில் உள்ள குழந்தைக்கு உணவைக் கொண்டு
செல்லும் கொடி தொப்புள் கொடி. ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளை, “தொப்புள் கொடி
உறவுகள்” என்பர். இதைப் பழந்தமிழ் ‘கொப்பூழ்’ என்கிறது. “நீள்நிற உருவின் நெடியோன்
கொப்பூழ்“ (பெரும்பாண்-402). கொப்பூழ் மருவி தொப்புழ்- தொப்பை –தொப்பு-உள்-கொடி
–தொப்புள் கொடியானதோ! பாலூட்டிகள் அனைத்தும் தாயின் வயிற்றிலிருந்து வந்ததன்
அடையாளக் குறியே தொப்புள்(Navel). மனிதர்க்கு மட்டுமே பளிச்சென்று தெரிகிறது.
பரிணாமமும்,
பரிமாணமும்
பரிணாம வளர்ச்சி பற்றி டார்வின் எழுதிய புகழ்பெற்ற நூல்- ‘உயிரினங்களின்
தோற்றம்’(1859). பரிணாமம் (Evolution) – படிப்படியாக வளர்ந்து மேம்படுவது.
குரங்கிலிருந்து பரிணமித்ததே மனித இனம். தமிழில் இதைப் ‘படிவளர்ச்சி’
என்கிறார்கள்.
பரிமாணம் (Dimention) அளவு, கோணம்.
முப்பரிமாணம், எனும் சொல்லிலேயே அதன் விளக்கம் உள்ளது. முப்பரிமாண(3D)
திரைப்படம் பார்க்க ஒரு சிறப்புக் கண்ணாடி அணிகிறோம் அல்லவா?
ஈ, தா, கொடு
ஆங்கிலத்தில் You எனும் சொல்லை, சொல்லும் முறையில் தான் மரியாதை அமையும். இதற்குத்
தமிழில் நீ, நீர், நீயிர், நீவிர், நீங்கள் எனப் பல சொற்கள் உண்டு. இப்போது,
ஒருமையில் ‘நீ’ யும், பன்மை மற்றும் மரியாதை ஒருமையில் ‘நீங்கள்’ என இரண்டு
மட்டும் வழக்கில் உள்ளன. இதே போல give எனும் ஆங்கிலச் சொல்லைத் தமிழில் மூன்று
வகையாகச் சொல்லலாம். மூன்றும் மூன்று நுட்பமான பொருளில் வரும்!
ஈ-என்பது தாழ்மையுடன் கேட்பது. (இன்றைய தமிழில் “எனக்குக் கொஞ்சம் கொடுப்பா“ எனக்
கெஞ்சிக் கேட்பது)
தா-என்பது சம உரிமையுடன் கேட்பது (“மச்சான் உன் சட்டையைத் தா டா“)
கொடு-என்பது உயர்ந்த(?) இடத்தில் உள்ளவர்கள் அதிகாரமாகக் கேட்பது. “வரிகொடு“
என்பதுபோல. இந்த விளக்கத்தை, தொல்காப்பியரை வழிமொழிந்து நன்னூலார் சொல்கிறார். “ஈ
தா கொடு எனக் கிளக்கும் மூன்றும், இழிந்தோன் ஒப்போன், மிக்கோன் இரப்புரை”
(நன்னூல்-பொது-407) தமிழ்ச்சொற்கள் நுட்பமானவை!
ரயிலடியும் காரடியும்
இலக்கிய, இலக்கணங்களை மொழியறிஞர் உருவாக்குகின்றனர். ஆனால் மொழிகள் சாதாரண
மக்களால் தான் வாழ்கின்றன! சாதாரண மக்களுக்கான இலக்கியங்கள் இருபதாம் நூற்றாண்டில்
தான் எழுந்தன. பாஞ்சாலி சபதத்தை, “ஓரிண்டு வருஷத்து நூல் பழக்கமுள்ள, சாதாரண
மக்களுக்காக” எழுதியதாக அதன் முன்னுரையில் சொல்கிறான் பாரதி.
பேச்சு மொழியில் பிறசொல் கலப்பதைத்
தவிர்க்க முடியாது. ஆனால், நீரோடும் ஆற்றைத் தூர்வார மறந்தால் நாளடைவில் நீரோட்டமே
தடைப்படும் அல்லவா? அதுபோல, மொழியைத் தூர்வார இலக்கணம் அவசியம். அறிஞர்கள்
உருவாக்கும் சொற்களை விட மக்களின் மொழி பொருத்தமாய் அமைந்து நிலைத்து விடுவதுண்டு!
ரயிலடி(தஞ்சை), இடைப் பலகாரம்-சிற்றுண்டி- (செட்டிநாட்டுப் பகுதி), மெய்யாலுமா?
செம(சிறப்பு), சகோ! (சென்னை) போலும் புதிய சொற்களை மக்களே உருவாக்கிக்
கொள்கிறார்கள். ஆனாலும் ‘ஜி’ போலும் பிறமொழி ஒட்டுச் சொற்களைத் தவிர்க்கலாம்.
மிதிவண்டி அழகான சொல்தான். அதற்குள் இருக்கும் முந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறு
பாகங்களில் ஒன்றுகூட தமிழில்லையே? சிந்தித்துப் பார்த்தால், புதிய கண்டு
பிடிப்புகள் தமிழர் வழி வந்தால்தான் தமிழ்ப் பெயர்களை வைக்க முடியும் என்பது தனி
ஆய்வுக்குரியது.
-------------------------------------
பின் குறிப்பு
தொப்புள் என்பதை ஆங்கிலத்தில் Navel என்பார்கள். நான் தவறுதலாக, “தொப்புள் கொடி“ என்னும் இடத்தில் அந்த ஆங்கிலச் சொல்லை இட்டுவிட்டேன். இதை நேற்று காலையில் (இந்து-தமிழ் நாளிதழில் படித்தவுடனே) எனக்குக் குறுஞ்செய்தி வழி தெரிவித்து தொப்புள்கொடிக்கும் விளக்கம் தந்தார்
மேட்டுர் நண்பரும் எழுத்தாளருமான
மருத்துவர் திரு குருநாதன் அவர்கள்.
பிறகு இந்த நமது வலைத்தளத்தில் திருத்தியதோடு, அச்சு நூலாக வரும்போதும் திருத்தி விடுவதாக நண்பருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டேன். இவை ஆக்கபூர்வமான தகவல்கள்.
நாம் தவறு செய்து, திருத்தி, கற்றுக் கொள்ளலாம்!
தமிழில் தவறு நேர்ந்துவிடக் கூடாது!
எடுத்துரைத்த நண்பர்க்கு நன்றி.
-----------------------------------------